தமிழகத்திற்கு தேவையான நிதியை வழங்க ஜேட்லி உறுதி: தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் தகவல்
தமிழகத்திற்கு தேவையான நிதியை விரைவில் வழங்க மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உறுதியளித்துள்ளதாக ...
புதுதில்லி: தமிழகத்திற்கு தேவையான நிதியை விரைவில் வழங்க மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி உறுதியளித்துள்ளதாக தில்லியில் அவரைச் சந்தித்த பின்பு தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் தகவல் தெரிவித்தார்.
2016-17 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நேற்று தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் மாநில சட்டசபையில் தாக்கல் செய்தார். இந்நிலையில் மத்திய அரசிடம் இருந்து பெற வேண்டிய நிதிகள் குறித்து பேசுவதற்காக அவரும், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் இன்று தில்லிக்கு சென்றனர். அங்கே மத்திய நிதியமைச்சர் ஜேட்லியைச் சந்தித்த பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:
தமிழகத்திற்கு சேர வேண்டிய நிதியை விரைவில் வழங்குமாறு வற்புறுத்தவே நிதியமைச்சரை சந்தித்தோம். குறிப்பாக வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு பயிர் நிவாரணம் வழங்குவதற்கு ரூ.22,049 கோடியும், வர்தா புயல் பாதிப்பிற்கு ரூ.5,145 கோடியும் வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். அவரும் விரைவில் நிதி வழங்க ஆவண செய்வதாக உறுதியளித்துள்ளார்.
இவ்வாறு ஜெயக்குமார் தெரிவித்தார்.