மனு முத்திரைத்தாள் விலை உயர்வு: பொதுமக்கள், வழக்குரைஞர்கள் அதிருப்தி
நீதிமன்றம், வட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பிக்கும் மனு முத்திரைத்தாள் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள், வழக்குரைஞர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
நீதிமன்றம், வட்டாட்சியர் அலுவலகங்களில் விண்ணப்பிக்கும் மனு முத்திரைத்தாள் விலை திடீரென உயர்த்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள், வழக்குரைஞர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் அனைத்து அலுவலகத்திலும் தமிழக அரசின் திட்டங்கள் பெற, வட்டாட்சியர், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சான்றிதழ் பெற மற்றும் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய மனு முத்திரைத்தாள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மனுவுக்கு ரூ. 2 முத்திரைத்தாள் ஒட்டி விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் மார்ச் 1ஆம் தேதி முதல் மனு முத்திரைத்தாள் விலை ரூ. 20 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மனு கொடுக்கவே கூடுதலாக செலவு ஆகிறது என பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் மனு தாக்கல் செய்ய முத்திரைத்தாள் விலை உயர்வால் ஒரு வழக்கிற்கு மனு செய்ய ரூ. 1000க்கு மேல் செலவு ஆவதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குரைஞர் ஒருவர் கூறியது: இப்போது விலை உயர்த்தப்பட்ட ரூ. 20 மனு முத்திரைத்தாளை பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். ரூ. 2 முத்திரைத்தாள் மூலம் விண்ணப்பித்தால் மனு தள்ளுபடி செய்யப்படும் என நீதிமன்றத்தில் தெரிவிக்கின்றனர். எனவே தமிழக அரசு மனு முத்திரைத்தாள் விலையை குறைக்க வேண்டும் என்றார்.