சென்னை பட்டினப்பாக்கத்தில் கார் மரத்தின் மீது மோதி தீப்பிடித்ததில் கார் பந்தய வீரர் அஸ்வின் சுந்தர் மற்றும் அவரது மனைவி உயிரிழந்தனர்.
கார் பந்தய வீரரான அஸ்வின் சுந்தர் நள்ளிரவு ஓட்டல் ஒன்றில் உணவருந்திவிட்டு சென்னை பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி. நகர் வழியாக தனது பி.எம்.டபிள்யூ. காரில் வீடு திரும்பியிருக்கிறார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த மரத்தின் மீது திடீரென மோதியது. மோதிய வேகத்தில் கார் தீப்பிடித்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த கார் பந்தய வீரர் அஸ்வின் சுந்தர் மற்றும் அவரது மனைவி நிவேதா உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து இரு தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட போராட்டத்துக்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருவரின் உடலும் மீட்கப்பட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் உடல் கூராய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இவ்விபத்து குறித்து அடையார் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.