மதுரை: வீட்டில் கழிப்பறை கட்டாதவர்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் வேலை வழங்கப்படுவது இல்லை என்ற புகாரை அடுத்து விளக்கமளிக்குமாறு தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட இயக்குனருக்கு மதுரை உயர்நீதி மன்ற கிளை சம்மன் அனுப்பியுள்ளது.
கோவில்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பையா.இவர் சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை ஒதுக்கீடு செய்யப்படும் பொழுது, வீட்டில் கழிப்பறை கட்டாதவர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படுவதில்லை என்றும், இதனை விசாரித்து அனைவருக்கும் சரியான அளவில் வேலை வாய்ப்புகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து சுப்பையாவின் புகார் குறித்து தகுந்த விளக்கம் அளிக்குமாறு தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட இயக்குனருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கை வரும் ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தும் உத்தரவிடப்பட்டுள்ளது.