இடைத்தேர்தல் வெற்றிக்கு பிறகு இரட்டை இலைச் சின்னம் மீட்கப்படுவது உறுதி என அதிமுக (அம்மா) வேட்பாளர் டிடிவி.தினகரன் தெரிவித்தார்.
சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தினகரன் நேதாஜி நகர், வஉசி நகர் பகுதியில் வேன் மூலம் வீதி வீதியாக ஞாயிற்றுக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியது:
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திமுகவுடன் கூட்டணி அமைத்துச் செயல்பட்டதன் மூலம் அதிமுகவின் இரட்டை இலைச் சின்னம் முடக்கப்பட்டது. இதனை அவர்கள் மறுத்தாலும் உண்மை இதுதான்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆசியுடன் போட்டியிடும் நான் துரோகங்களை முறியடித்து இத்தேர்தலில் 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் நிச்சயம் வெற்றி பெறுவேன். இடைத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு இரட்டை இலைச் சின்னம் நிச்சயம் மீட்கப்படும். இதற்கான முயற்சியாகத்தான் இத்தேர்தலில் அனைத்து முக்கியத் தலைவர்களும், தொண்டர்களும் முனைப்புடன் தேர்தல் பணியாற்றி வருகின்றனர் என்றார் தினகரன்.
பிரசாரத்தின்போது அமைச்சர்கள் செங்கோட்டையன், காமராஜ், எம்.ஆர்.விஜயபாஸ்கர், எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, இன்பதுரை உள்ளிட்டோர் உடனிருந்தனர்.