புதுதில்லி: நெடுவாசல் மக்களின் சந்தேகம் தீர்த்த பின்னரே ஹைட்ரோ கார்பன் திட்டப்பணிகள் துவங்கப்படும் என்று மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தற்பொழுது வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் பூமிக்கு அடியில் இருந்து ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால் திட்டமிட்டபடி நாடு முழுவது 31 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டதிற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்று மத்திய அரசு சில நாட்களுக்கு முன்னதாக அறிவித்தது.
அதன்படி இன்று புதுதில்லியில் இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. மத்திய பெட்ரோலியத்துறை சார்பாக உயர் அதிகாரியான ராகேஷ் மிஸ்ரா இந்த ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் கர்நாடகாவின் ஜெம் லாபாரட்டரீஸ் நிறுவனமும், காரைக்காலில் பாரத் ரிசோர்ஸ் நிறுவனம் இதற்கான பணிகளில் ஈடுபடவுள்ளன.
இந்நிலையில் மத்திய பெட்ரோலியத் துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
நெடுவாசல் மக்களின் சந்தேகம் தீர்த்த பின்னரே ஹைட்ரோ கார்பன் திட்டப்பணிகள் முறையாக துவங்கப்படும்.அதற்கு ஏதுவாக மக்களின் அச்சம் தீர்க்கும் பணிகளில் தமிழக அரசு ஈடுபடும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதனை ஏற்காமல் தொடர்ந்து திட்டத்திற்கு எதிராக நெடுவாசல் பொதுமக்களின் போராட்டங்கள் மீண்டும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.