வாலாஜாபேட்டை: காவேரிப்பாக்கம் அருகே விவசாய நிலத்தை சமன் செய்த போது ஆயிரம் ஆண்டுகள் பழைமையான மகாவீரர் சிலை கண்டெடுக்கப்பட்டது.
காவேரிப்பாக்கத்தை அடுத்த துரைபெரும்பாக்கம் ஊராட்சி அலுவலகம் எதிரே சென்னையைச் சேர்ந்த பிரேமாவதிக்குச் சொந்தமான 2 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இந்த நிலத்தை சனிக்கிழமை பொக்லைன் உதவியுடன் சமன் செய்தபோது, 5 அடி ஆழத்தில் புதைந்திருந்த 3 அடி உயரம் கொண்ட மகா வீரர் சிலை கண்டெடுக்கப்பட்டது.
இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் சௌந்தரராஜனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த காவேரிப்பாக்கம் வருவாய் ஆய்வாளர் சந்தியா, கிராம நிர்வாக அலுவலர்கள் ராமு, முரளிதரன், பாலாஜி ஆகியோர் நிலத்தில் வேலை செய்த தொழிலாளிகளிடம் விவரங்களைக் கேட்டறிந்து நெமிலி வட்டாட்சியர் பாஸ்கரனுக்கு தகவல் தெரிவித்தனர். அவரது உத்தரவைத் தொடர்ந்து, மகாவீரரின் சிலையை வருவாய்த் துறையினர் நெமிலி வட்டாட்சியர் அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.
மேலும் சிலையை ஆய்வுசெய்த காப்பாட்சியர் சரவணன் கூறியதாவது:
பல்லவர் மற்றும் சோழர் காலங்களில் சமண மதத்தைச் சேர்ந்தவர்கள் வேலூர் மாவட்டத்தில் அதிகளவில் வாழ்ந்து வந்தனர். இது வரா சமண மதத்தைச் சேர்ந்த 8 தீர்த்தங்கர்களின் கற்சிலை ஆகும். இதுபோன்ற சிலைகள் பல கால கட்டங்களில் பூமியிலிருந்து கண்டெடுக்கப்பட்டு, வேலூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
துரைபெரும்பாக்கம் கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள மகாவீரர் சிலை ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது. மாவட்ட ஆட்சியர் ஒப்புதல் பெற்றவுடன் மகாவீரர் சிலை மக்கள் பார்வைக்காக வேலூர் அருங்காட்சியகத்தில் வைக்கப்படும் என காப்பாட்சியர் சரவணன் தெரிவித்தார்.