ராமேசுவரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த நாட்டுப் படகு மீனவர்கள் 5 பேர் இலங்கை கடற்படையினரால் திங்கள்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டனர்.
மீன்பிடி தடைக்காலத்தை முன்னிட்டு மே 29 வரை விசைப் படகுகள் கடலுக்குச் செல்ல அனுமதி கிடையாது. இதனால், நாட்டுப் படகுகளில் சென்று மீனவர்கள் மீன் பிடிக்கின்றனர்.
ராமேசுவரம் அருகேயுள்ள தங்கச்சி மடத்தை சேர்ந்த மீனவர்கள், 300-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளில் தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடைப்பட்ட பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக 3 ரோந்துப் படகுகளில் வந்த இலங்கை கடற்படையினர், அடிமை என்பவருக்குச் சொந்தமான நாட்டுப்படகில் மீன்பிடித்துக்கொண்டிருந்த, தங்கச்சி மடத்தை சேர்ந்த ஆரோக்கியம், அபிஷேக், அந்தோணி, சந்தியா ரமேஷ், ராஜகுலசேகரன் ஆகிய 5 பேரையும் எல்லை தாண்டியதாக கைது செய்தனர்.
பின்னர் மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திய பின், தலைமன்னாரில் உள்ள மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதன்பிறகு, மன்னார் நீதிமன்றத்தில் மீனவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்கள் 5 பேரையும் மே 15 ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி அலெக்ஸ் ராஜா உத்தரவிட்டார்.