இன்று முதல் அக்னி நட்சத்திரம்: உள்மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும்
தமிழகத்தில் வியாழக்கிழமை முதல் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் காலம் தொடங்க உள்ளது.
தமிழகத்தில் வியாழக்கிழமை முதல் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் காலம் தொடங்க உள்ளது.
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் உள்மாவட்டங்களில் சற்று அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கோடைக்காலத்தின் உச்சம் என்று வர்ணிக்கப்படும் அக்னி நட்சத்திர காலம் தமிழகத்தில் மே 4-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி முடிவடைகிறது. இதன் காரணமாக வெப்பத்தின் தாக்கம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் வெப்பத்தால் உருவாகிய இடிமேகங்களால் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கோடை மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை, கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறையில் 60 மி.மீ. மழை பெய்துள்ளது. இதுதவிர, திண்டுக்கல், விருதுநகர், சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும் மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தைப் பொருத்தவரை, உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம், உள்மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கமும் அதிகரிக்கும்.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், தெற்கு மற்றும் தென்மேற்குத் திசையில் இருந்து காற்று வீசுவதால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் 1 முதல் 2 டிகிரி குறைவாகப் பதிவாகியுள்ளது. உள்மாவட்டங்களில் மேற்கு திசையில் இருந்து காற்று வீசுவதால் இயல்பைக் காட்டிலும் 1 முதல் 2 டிகிரி வெப்பம் அதிகரித்துள்ளது. இதே நிலை இன்னும் 3 தினங்களுக்கு நீடிக்கும் என்றார்.
சதம் குறைவு: புதன்கிழமை மாலை நிலவரப்படி, தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் சற்று குறைவாகவே பதிவாகியுள்ளது. 5 இடங்களில் மட்டுமே 100 டிகிரிக்கும் அதிகமாக வெப்பம் பதிவானது.