தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தம்:புதுவையிலும் பாதிப்பு எதிரொலி
தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தத்தின் பாதிப்பு புதுச்சேரியிலும் எதிரொலித்துள்ளது. எனினும் பிஆர்டிசி மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
புதுச்சேரி: தமிழக அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலைநிறுத்தத்தின் பாதிப்பு புதுச்சேரியிலும் எதிரொலித்துள்ளது. எனினும் பிஆர்டிசி மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
ஊதிய உயர்வு, ஓய்வூதியப்பலன்கள் வழங்க வேண்டும், உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், போக்குவரத்துக் கழக ஊழியர்கள் தொழிற்சங்கங்கங்கள் சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் அண்ணா தொழிற்சங்கம் தவிர இதர தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதை முறியடிக்க தமிழக அரசும் தனியார் பஸ்களை அதிகளவில் பயணிகளை ஏற்றிச் செல்லும் பணியில் ஈடுபடுத்தியுள்ளது.
புதுச்சேரியிலும் பாதிப்பு
புதுச்சேரிக்கு நாள்தோறும் 1500-க்கு மேற்பட்ட தமிழக அரசுப் பேருந்துகள் வந்து செல்லும். குறிப்பாக நாகப்பட்டினம், காரைக்கால், கும்பகோணம், கடலூர், சென்னை, விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திண்டிவனம், சேலம் பகுதிகளில் இருந்து அரசு பேருந்துகளும், கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவை, மதுரை, திருச்சி போன்ற ஊர்களில் இருந்து விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளும் இயங்கி வருகின்றன.
போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் தமிழக அரசு பேருந்துகள் இயக்கம் முழுமையாக முடங்கியது. தமிழகத்தை போல் புதுச்சேரியிலும் தமிழ்க அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை.
மேலும் உப்பளத்தில் தமிழக அரசு போக்குவரத்துக்கழகம் விழுப்புரம் மண்டல பணிமனை உள்ளது. அங்கிருந்து 61 பேருந்துகள் இயக்கப்படாத நிலை உள்ளது,
புதுச்சேரியில் இருந்து தமிழகத்துக்கு செல்லும் பேருந்துகள் இயங்காததால் பயணிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
பிஆர்டிசி, தனியார் பஸ்கள்
பயணிகளுக்கு பாதிப்பை குறைக்கும் வகையில் புதுச்சேரி அரசு சார்பில் வழக்கமாக இயக்கப்படும் பிஆர்டிசி பேருந்துகளுடன் கூடுதலாக 15 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதே போல் தனியார் பேருந்துகளும் முழுமையாக இயக்கப்படுகின்றன.
அசம்பாவித சம்பவங்கள் நேரிடாமல் தடுக்கும் வகையில் புதுச்சேரி போலீஸார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.