முகப்பு
தமிழ்நாடு

81 லட்சம் மின்னணு குடும்ப அட்டைகள் இதுவரை விநியோகம்

மாநில அளவில் இதுவரையில் 81 லட்சத்து 17 ஆயிரத்து 938 மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக உணவு வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On : 29 ஜனவரி, 2024 at 2:32 PM
பகிர்:

மாநில அளவில் இதுவரையில் 81 லட்சத்து 17 ஆயிரத்து 938 மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளதாக உணவு வழங்கல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பழைய குடும்ப அட்டைகளுக்கு மாற்றாக, புதிதாக மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கும் பணி, கடந்த ஏப்ரல் 1 -ஆம் தேதி முதல் மாநில அளவில் நடைபெற்று வருகிறது. இதுவரையில் 81 லட்சத்து 17 ஆயிரத்து 938 மின்னணு குடும்ப அட்டைகள்
அந்தந்த பகுதியில் உள்ள நியாயவிலை கடைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த அட்டைகளில் உள்ள விவரங்களை சரிபார்த்து நுகர்வோருக்கு வழங்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இதேபோல், சென்னை மாவட்டத்தில் 1,400 நியாயவிலை கடைகளில் மொத்தம் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகள் உள்ளன. தற்போது முதல்கட்டமாக 2.5 லட்சம் மின்னணு குடும்ப அட்டைகள் அந்தந்த பகுதி நியாயவிலைக் கடைகளுக்கு அளிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து நியாய விலைக் கடை பணியாளர் ஒருவர் கூறியதாவது:
தற்போதைய நிலையில் ஒவ்வொரு கடைக்கும் மூன்று நாள்களுக்கு ஒருமுறை 100 முதல் 150 மின்னணு குடும்ப அட்டைகளே வழங்கப்படுகின்றன.
ஆனால், இந்த அட்டைகளை எங்களுக்கு வழங்குவதற்கு முன்பாகவே, கடைகளுக்குச் சென்று பொதுமக்கள் பெற்றுக் கொள்ள வகை செய்திடும், ஒருமுறை பயன்படுத்தும் ரகசிய எண் அவர்களது செல்லிடப்பேசிக்கு அனுப்பப்பட்டு விடுகிறது. இதைப் பார்த்து நியாயவிலைக் கடைகளில் பொதுமக்கள் குவிந்து விடுகின்றனர். நியாயவிலைக் கடைகளுக்கு அட்டைகள் சென்று சேர்ந்த பிறகு, அதுதொடர்பாக மக்களுக்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும் என்றார் அவர்.
மாத இறுதிக்குள் அனைவருக்கும் ஸ்மார்ட் கார்டு
மின்னணு குடும்ப அட்டைகள் (ஸ்மார்ட் கார்டு) வழங்கும் பணி இம்மாத இறுதிக்குள் நிறைவடையும் என்று உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார்.
சென்னை கோபாலபுரத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் அவர் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வைத் தொடர்ந்து அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்தில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன. மீதமுள்ள குடும்ப அட்டைகள் அனைத்தையும் இந்த மாத இறுதிக்குள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அத்தியாவசியப் பொருள்கள் கடத்தல் தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து இதுவரை 973 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →