தடையை மீறி மெரீனாவில் போராட்டம் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
சென்னை மெரீனாவில் ஜல்லிக்கட்டு போராட்டம் நடைபெற்ற பின்னர் அங்கு போராட்டம், பேரணி, ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட எந்த நிகழ்வுக்கும் சென்னை காவல் துறை அனுமதி வழங்குவதில்லை.
மேலும் அங்கு போராட்டம் நடத்தினால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அங்கு போராட்டம் நடத்த முயன்றதாக சில அமைப்புகளைச் சேர்ந்தவர்களை போலீஸார் அவ்வப்போது கைது செய்து வருகின்றனர். அதேவேளையில், எந்தவொரு அமைப்பினரும் போராட்டம் நடத்த பெரும் அளவில் திரண்டு வந்துவிடக் கூடாது என்பதற்காக மெரீனா கடற்கரை முழுவதும் நூற்றுக்கணக்கான போலீஸார் தினமும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இலங்கையில் நடைபெற்ற இறுதிக் கட்டப்போரில் அப்பாவி தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் நினைவு தினத்தையொட்டி, மெரீனாவில் நினைவு அஞ்சலி நிகழ்ச்சியும், இலங்கை மீது ஐ.நா. நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டமும் நடத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, மெரீனாவில் போராட்டம் நடத்துவதற்கு காவல் துறை ஏற்கெனவே அனுமதியை மறுத்துவிட்ட நிலையில், சில அமைப்புகள் தடையை மீறி அங்கு போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.
இதனால் மெரீனாவில் காவல் துறை பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி மெரீனாவில் கூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.