சென்னை: தனியார் பால் நிறுவனங்களில், தயிரைக் கூட பல்வேறு சுழற்சிகளில் மீண்டும் பாலாக்குவதாக தமிழக பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ள குற்றச்சாட்டு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலில் ரசாயனம் கலக்கப்படுவதாக தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு ஊடகங்களில் மிகக் காட்டமான கேள்விகளும் எழுப்பப்பட்டன. அதற்கும் அவர் பதிலளித்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று தனியார் பால் நிறுவனம் ஒன்று சென்னையில், அமைச்சர் கூறுவது போல, எங்கள் நிறுவனப் பாலில் ரசாயனம் கலக்கப்படுவதில்லை என்று விளக்கம் கூறியது.
இந்த விளக்கம் குறித்து அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் கேட்ட போது அவர் கூறியதாவது, தனியார் பால் நிறுவனங்கள் நீண்ட நேரம் தங்களது பால் கெட்டுப் போகாமல் இருக்க ஹைட்ரோஜென் பெராக்ஸைட் (H2O2) என்ற ஆசிட்டை பாலில் கலக்கிறார்கள். சுத்தமான பால் என்பது பிரிட்ஜில் இருந்து எடுத்து வைத்தால் 5 மணி நேரத்தில் கெட்டுப் போய்விடும். நிச்சயம் ஆவின் பால் இந்த சோதனையில் தேர்ச்சி பெறும் என்று சவால் விடுகிறேன் என்றார்.
மேலும், சென்னை, திருச்சி, கோவை, சேலம் ஆகிய நகரங்களுக்கு நான்கு சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, தனியார் நிறுவனப் பால் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளது. ஆதாரங்கள் கிடைத்ததும், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பாலில் கலப்படும், பாலில் ரசாயனம் என்ற குற்றச்சாட்டுகளை எல்லாம் தாண்டி நாம் வாங்குவது பாலே இல்லை, தயிர் என்றால் நிச்சயம் கதிகலங்கத்தான் செய்யும்.