சென்னை: பிரதமர் மோடி கட்டப்பஞ்சாயத்து செய்கிறார் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் சொன்னதற்கு மன்னிப்புக் கேட்டு அதனைத் திரும்பப் பெற வேண்டும் என்று எச். ராஜா வலியுறுத்தியுள்ளார்.
சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசியச் செயலர் எச். ராஜா, பிரதமர் மோடியை ஸ்டாலின் இவ்வாறு விமரிசித்திருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. உடனடியாக அவர் மோடியை கட்டப்பஞ்சாயத்து செய்கிறார் என்று சொன்னதற்கு மன்னிப்புக் கேட்டு, அவ்வாறு சொன்னதை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், தமிழகத்தின் முதல்வராக வேண்டும் என்ற ஆசையில் இருந்தவர் தற்போது விரக்தி அடைந்திருக்கிறார். அதனால்தான் இதுபோன்று நடந்து கொள்கிறார் என்றும் ஸ்டாலினை எச். ராஜா விமரிசனம் செய்தார்.
அதிமுக இரு அணிகளையும் இணைப்பதற்காக, பிரதமர் மோடி கட்டப்பஞ்சாயத்து செய்து வருவதாக மு.க. ஸ்டாலின் நேற்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.