மோரா புயலால் தமிழகத்துக்கு பாதிப்பில்லை: வானிலை ஆய்வு மையம்
வங்கக் கடலில் உருவான மோரா புயல் வங்கதேசத்தை நோக்கி நகர்வதால் தமிழகத்துக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான மோரா புயல் வங்கதேசத்தை நோக்கி நகர்வதால் தமிழகத்துக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை வானிலை மையத்தின் இயக்குநர் பாலச்சந்திரன் கூறியது:
மோரா புயலால் தமிழகத்துக்குப் பாதிப்பு இல்லை. கேரளத்தில் செவ்வாய்க்கிழமை (மே 30) தென்மேற்குப் பருவமழை தொடங்கச் சாதகமான சூழல் உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளது என்றார்.
இன்று கரையைக் கடக்கும்: வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை மோரா புயலாக மாறியுள்ளது. மோரா புயல் செவ்வாய்க்கிழமை பிற்பகல் வங்கதேசம் அருகே கரையைக் கடக்கும்.
தற்போது கொல்கத்தா அருகே 600 கி.மீ. தூரத்தில் மையம் கொண்டுள்ளது. இதனால் கடலோரப் பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும். கடலூர், தூத்துக்குடி, எண்ணூர், பாம்பன், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் 2-ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.