தமிழ்நாடு

நாகை மீனவர்கள் 8 பேர் இலங்கைக் கடற்படையால் சிறைபிடிப்பு

DIN

நாகையிலிருந்து விசைப் படகில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 8 பேர் இலங்கைக் கடற்படையினரால் சனிக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.
நாகை அக்கரைப்பேட்டை, திடீர் குப்பத்தைச் சேர்ந்தவர் கோ. சண்முகநாதன் (35). இவருக்குச் சொந்தமான விசைப் படகில், சண்முகநாதன் மற்றும் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பத்தைச் சேர்ந்த மீன்பிடித் தொழிலாளர்கள் அ. ஆறுமுகம் (50), சு. முருகன் (35), ந. குட்டியாண்டி (50), வ. தமிழ்மாறன் (45), கோவிந்தன் (45), கோ. மூர்த்தி (38), மு. மகேந்திரன்(50) ஆகிய 8 பேர் நாகை துறைமுகத்திலிருந்து வெள்ளிக்கிழமை இரவு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.
அவர்கள், சனிக்கிழமை இரவு கோடியக்கரை கடல் பரப்பு அருகே மீன்பிடிப்பில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர், நாகை மீனவர்கள் 8 பேரையும், விசைப் படகுடன் சிறைபிடித்து, ஞாயிற்றுக்கிழமை காலை இலங்கை பருத்தித்துறை முகாமுக்குக் கொண்டுச் சென்றனர். பின்னர், நாகை மீனவர்கள் 8 பேரையும், இலங்கைக் கடற்படையினர் யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். 
நாகை மாவட்டத்தில் கடந்த திங்கள்கிழமை முதல் கடல் சீற்றமும், மழை சீற்றமும் நீடித்து வரும் நிலையில் மாவட்டத்தின் மீன்பிடித் தொழில் முடங்கியுள்ளது. வெள்ளிக்கிழமை மழை சீற்றம் சற்றுக் குறைந்திருந்த நிலையில், இந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றதாகக் கூறப்படுகிறது. 
பல ஆண்டுகளாக மீன்பிடி தொழிலில் உள்ள இந்தப் படகு இதுவரை, சிறைபிடிப்பு நடவடிக்கைகளுக்கு உள்ளானது இல்லை எனவும், கடல் காற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் திசை மாறி பயணித்திருக்கலாம் எனவும் மீனவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
கண்டனம்: மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டதற்கு மீனவர் சங்கம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'இலங்கைக் கடற்படை அவ்வப்போது, தமிழக மீனவர்களைக் கைது செய்து, படகுகளை சிறைபிடித்து வருவதால் தமிழக மீனவர்கள் ஏற்கெனவே பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், நாகை மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இயற்கை சீற்றத்தால் திசைமாறும் மீனவர்களை எச்சரித்து திருப்பி அனுப்புவதுதான் நட்பு நாட்டின் சுமுக நடவடிக்கையாக இருக்க முடியும் என்ற வகையில், இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கை கண்டனத்துக்குரியது' என இந்திய தேசிய மீனவர் சங்கப் பொறுப்பாளர் ஆர்.எம்.பி. ராஜேந்திரநாட்டார் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT