என் வீட்டில் கற்கண்டைக் கூட வைரமாக நினைத்தால் நான் பொறுப்பல்ல: திருவண்ணாமலையில் தினகரன் பேட்டி
என் வீட்டில் இருக்கும் கற்கண்டைக் கூட வைரமாக நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல என்று அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
திருவண்ணாமலை: என் வீட்டில் இருக்கும் கற்கண்டைக் கூட வைரமாக நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல என்று அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சசிகலாவின் உறவினர்கள் வீடு, அலுவலகங்களில் இன்று தொடர்ந்து 3வது நாளாக சோதனை நடைபெற்று வரும் நிலையில், டிடிவி தினகரன் திருவண்ணாமலை வந்தார்.
திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 3 மணி நேரத்தில் முடிக்க வேண்டிய சோதனையை 3 நாட்களாக நடத்தி வருகிறார்கள். வேண்டுமென்றே உள் நோக்கத்துடன் இந்த சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
என் வீட்டில் பாதாள அறையும் இல்லை. எந்த நகையும் இல்லை. என் வீட்டில் இருக்கும் கற்கண்டைக் கூட அவர்கள் வைரமாக நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல. நான் வழக்கமாக சாப்பிடும் ஓட்டல்களைக் கூட வைக்கவில்லை. அங்கும் சோதனை நடத்தப்பட்டுள்ளது என்றார் தினகரன்.
உறவினர் வீட்டில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதாக வெளியான செய்தி குறித்துக் கேட்டதற்கு, என் உறவினர் வீட்டில் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டதா என்பது பற்றி எனக்குத் தெரியாது என்றார்.
இந்த அளவுக்கு காழ்ப்புணர்ச்சியோடு செயல்படுகிறார்கள். ஆனால் நீங்கள் அமைதியாக இருக்கிறீர்களே என்று கேட்டதற்கு, நான் காந்தியின் பேரனும் அல்ல; கோட்சேவின் வழித்தோன்றலும் அல்ல என்று பதிலளித்தார்.
கைது நடவடிககை இருந்தால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு, கைது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அதனை சட்டப்படி எதிர்கொள்வேன் என்றார்.