அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சங்க பொதுச்செயலர் ஜி.ஆர். ரவீந்திரநாத் சென்னை செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது:
போட்டித் தேர்வுக்கான இலவசப் பயிற்சி மையங்களை தமிழக அரசு தொடங்கியுள்ளது வரவேற்கத்தக்கது. கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் வட்டந்தோறும் விடுதியுடன் கூடிய மையங்களை அமைப்பதுடன், சிறந்த பயிற்றுநர்களை நியமிக்க வேண்டும்.
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இளநிலை, முதுநிலை, உயர் சிறப்பு மருத்துவ இடங்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்குப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆயுர்வேதம், யுனானி, சித்த மருத்துவம், ஹோமியோபதி, பொறியியல் படிப்புகளுக்கு நீட் தேர்வை மத்திய அரசு அமல்படுத்தக் கூடாது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரிகளிலும் அகில இந்திய தொகுப்பிலும் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்திய மருத்துவக் கவுன்சிலின் (எம்சிஐ) இளநிலை மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கை விதிகளில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வர வேண்டும். மத்திய அரசு உருவாக்கியுள்ள தேசியத் தேர்வு முகமை மூலம் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களுக்கு நுழைவுத் தேர்வை நடத்த தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது.