கோவை பாரதியார் பல்கலைக் கழகத் துணைவேந்தர் கணபதி மீது எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கின் விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
கோவை வடவள்ளி காவல் நிலையத்தில் துணை வேந்தர் கணபதி மீது லெட்சுமி பிரபா என்பவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், இந்த விவகாரத்தில் அரசியலமைப்பு அதிகாரம் மிக்க உயர்பதவிகளில் இருக்கும் துணை வேந்தர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
எந்த விதமான முதற்கட்ட விசாரணையும் செய்யாமல் எப்படி இதுபோன்று வழக்குப் பதிவு செய்யப்படுகிறது என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, வழக்குப் பதிவு செய்த உதவி காவல் ஆய்வாளரின் செயல் துரதிர்ஷ்டவசமானது என்று நீதிபதி குறிப்பிட்டார்.
துணைவேந்தர் மீதான வழக்கு விசாரணைக்கு வரும் 24-ஆம் தேதி வரை தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.