அரசுப் பேருந்தை வழிமறித்த யானைகள்
மஞ்சூர் - கோவை சாலையில் வியாழக்கிழமை அரசுப் பேருந்தை 5 யானைகள் வழிமறித்தன.
மஞ்சூர் - கோவை சாலையில் வியாழக்கிழமை அரசுப் பேருந்தை 5 யானைகள் வழிமறித்தன.
நீலகிரி மாவட்டம், மஞ்சூரில் இருந்து கோவை செல்லும் சாலையில் 50 கி.மீட்டரில் மொத்தம் 48 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளன. இச்சாலை அடர்ந்த வனப் பகுதியையொட்டி உள்ளது. மஞ்சூரில் இருந்து கெத்தை, பெரும்பள்ளம் செல்லும் வழியில் நீராதாரப் பகுதிகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள வனங்களில் யானை, புலி, சிறுத்தை, கரடி, குரங்கு உள்ளிட்ட வன விலங்குகள் அதிக அளவில் உள்ளன.
அவ்வப்போது கரடி, சிறுத்தை, யானை, காட்டெருமை உள்ளிட்ட விலங்குகள் மஞ்சூர் - கோவை சாலையின் இடையே கெத்தை வழியாக வரும் வாகனங்களை வழிமறிப்பது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில், கெத்தையிலிருந்து உதகை நோக்கி அரசுப் பேருந்து வியாழக்கிழமை வந்தபோது 5 யானைகள் பேருந்தை வழிமறித்தன. இப்பகுதியில் உள்ள சாலைகள் குறுகியதாக உள்ளதால் யானைகள் ஒதுங்கவும் இடமில்லாமல் போனது.
இதனால், வேறு வழியில்லாமல் ஓட்டுநர் பேருந்தை நிறுத்தினார். யானைகள் சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக பேருந்தின் முன்னும் பின்னுமாகச் சென்று கொண்டிருந்தன. யானைகள் சுற்றி சுற்றி வந்ததால் பேருந்தில் இருந்த பயணிகள் அச்சத்தில் செய்வதறியாமல் திகைத்தனர். பின்னர், சிறிது நேரம் கழித்து யானைகள் வனத்துக்குள் சென்றதால் பயணிகள் நிம்மதி அடைந்தனர். அதன் பின் பேருந்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.