ரூ. 4 ஆயிரம் லஞ்சம்: சார் பதிவாளர் கைது
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே ரூ. 4,000 லஞ்சம் வாங்கியதாக சார் பதிவாளர் உள்பட இருவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே ரூ. 4,000 லஞ்சம் வாங்கியதாக சார் பதிவாளர் உள்பட இருவர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
ஒரத்தநாடு அருகேயுள்ள பாப்பாநாடு கிராமத்தைச் சேர்ந்தவர் டி. முருகானந்தம். இவர் பாப்பாநாடு சார் பதிவாளர் அலுவலகத்தில் வீட்டு மனை தொடர்பாக, திங்கள்கிழமை (நவ.13) பத்திரம் பதிவு செய்தார். ஆனால், பத்திரத்தை கொடுப்பதற்கு முருகானந்தத்திடம் சார் பதிவாளர் (பொறுப்பு) முருகன் ரூ. 4,000 லஞ்சம் கேட்டாராம்.
லஞ்சம் கொடுக்க விரும்பாத முருகானந்தம், இதுகுறித்து தஞ்சாவூர் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் புகார் செய்தார். இதையடுத்து ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாரின் ஆலோசனைப்படி வியாழக்கிழமை இரவு, பாப்பாநாடு சார் பதிவாளர் அலுலகத்தில் முருகனிடம் முருகானந்தம் ரூ. 4,000 கொடுத்தாராம். இதை ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் மறைந்திருந்து கண்காணித்தனர். அப்போது, ரூ. 4,000 ரொக்கத்தை வாங்கியதாக முருகனையும், அவருக்கு உதவியதாக இடைத்தரகர் ஞானக்குமாரையும் போலீஸார் கைது செய்தனர்.