சென்னை: சசிகலாவுக்கு எந்த பாதுகாப்பையும் செய்யாமல் விட்டுவிட்டார் என்று ஜெயலலிதாவை குறை கூறிய திவாகரனின் பேச்சை அரசியலாக்க வேண்டாம் என்று அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா சசிகலாவை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டார், ஆனால் அவருக்கு எந்த பாதுகாப்பையும் வழங்காமல் சென்றுவிட்டார் என்று திவாகரன் கூறியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதாவது, மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய திவாகரன், சசிகலாவை ஜெயலலிதா முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டார். ஆனால், எங்களை நிராயுதபாணியாக விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். 33 ஆண்டுகள் ஜெயலலிதாவுடன் இருந்த எனது அக்காவை தன்னந்தனியே தவிக்க விட்டுச் சென்றுவிட்டார்.
தனக்குப் பிறகு சசிகலாவுக்கு எந்த பாதுகாப்பும் செய்யாமல் அவர் சென்றுவிட்டார். சசிகலாவின் நிலைமை வேறு எந்தப் பெண்ணுக்கும் வரக்கூடாது. எல்லா பெண்களுக்கும் தற்போது சசிகலா ஒரு சரியான உதாரணம். சசிகலாவை பார்த்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
சிகிச்சையின் போது, விடியோ எடுத்து வைத்துக் கொள், நம்மிடமே துரோகக் கும்பல் இருக்கிறது என்று சசிகலாவுக்கு எச்சரிக்கைப்படுத்திய ஜெயலலிதா, சசிகலாவுக்கு பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தாமல் போனதுதான் கேள்விக்குறியாகவே உள்ளது என்று கூறினார்.
இது குறித்து தஞ்சையில் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்த டிடிவி தினகரன், சசிகலாவை பாதுகாக்க ஜெயலலிதா தவறிவிட்டார் என்று திவாகரன் பேசியிருப்பதை பெரிதுபடுத்த வேண்டாம். கடந்த 33 ஆண்டுகளாக ஜெயலலிதாவுடன் இருந்த சசிகலா, அவருக்கு பல உதவிகளை செய்துள்ளார்.
தற்போது சசிகலாவை துயரத்தில் விட்டுச் சென்ற ஆதங்கத்தில்தான் திவாகரன் அப்படி பேசினார். இதை அரசியலாக்க வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், போயஸ் தோட்ட இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி பென்-டிரைவ் போன்றவற்றை கைப்பற்றியதாக செய்திகள் வருகின்றன. அவற்றில் எதுவும் இல்லை. பென்-டிரைவ் இருந்தாலே அதில் ரகசியம் இருக்கிறது என்று கூற முடியுமா என கேள்வி எழுப்பினார்.