ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் தனக்கு சிபிஐ அழைப்பாணை அனுப்புவது சட்ட விரோதமானது என்று கார்த்தி சிதம்பரம் கூறியிருக்கிறார்.
விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என்று தன்னை சிபிஐ வற்புறுத்தக் கூடாது என்றும் அவர் கூறியிருக்கிறார். ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில், விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு கார்த்தி சிதம்பரத்துக்கு சிபிஐ நோட்டீஸ் அனுப்பியிருந்தது. ஆனால், அவர் நேரில் ஆஜராக மறுத்துவிட்டார்.
இந்நிலையில், கார்த்தி சிதம்பரம் சார்பில், அவரது வழக்குரைஞர் அருண் நடராஜன், சிபிஐயிடம் அறிக்கை ஒன்றை புதன்கிழமை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு தொடர்பாக, முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரிடம் சிபிஐ கடந்த 2014-ஆம் ஆண்டு நவம்பர் 19 மற்றும் டிசம்பர் 6-ஆம் தேதிகளில் விசாரணை நடத்தி விட்டது.
சிபிஐ மற்றும் இதர விசாரணை அமைப்புகள் தற்போது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. அந்த அமைப்புகள், கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்தில், அரசியல் பழிவாங்கும் நோக்கில் அவ்வப்போது வேண்டுமென்றே விஷமப் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன.
ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் தொடர்புடைய அனைத்து விசாரணைகளும் ஏற்கெனவே முடித்து வைக்கப்பட்டன. குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டுவிட்டார்கள். இருப்பினும், கார்த்தி சிதம்பரத்துக்கு சிபிஐ அழைப்பாணை அனுப்பியிருக்கிறது. அவருக்கு அழைப்பாணை அனுப்பியது, சட்ட விரோதச் செயல். அவரையும், அவரது குடும்பத்தினரை துன்புறுத்தும் நோக்கத்துடன் மேற்கொள்பட்ட நடவடிக்கை என்பது தெளிவாகிறது. எனவே, இதுதொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார் என்று அந்த அறிக்கையில் அருண் நடராஜன் குறிப்பிட்டுள்ளார். ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு விசாரணைக்காக, கார்த்தி சிதம்பரம், கடந்த 29-ஆம் தேதி சிபிஐ முன் ஆஜராக மறுத்துவிட்டார். அப்போது, அந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த 8 பேரில் 4 பேர் மட்டுமே விடுவிக்கப்பட்டனர் என்று சிபிஐ தெரிவித்தது.
''மேலும், மற்ற 4 பேருக்கு எதிராக, தில்லி உயர் நீதிமன்றத்தில் கடந்த மே மாதம் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. வழக்கில் தொடர்புடைய மலேசியாவைச் சேர்ந்த 2 பேரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. எனவே, வழக்கு விசாரணை முடிவடையவில்லை என்று சிபிஐ தெரிவித்ததிருந்தது.