தமிழ்நாடு

ஜிஸ்டியால் சரிந்தது தீபாவளி பண்டிகைக் கால லாரி போக்குவரத்து வர்த்தகம்

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் வெறும் 20 சதவீதம் அளவு மட்டுமே லாரி போக்குவரத்து வர்த்தகம் நடைபெறுவதாகவும்

கே.விஜயபாஸ்கா்

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் வெறும் 20 சதவீதம் அளவு மட்டுமே லாரி போக்குவரத்து வர்த்தகம் நடைபெறுவதாகவும், இதற்கு முக்கிய காரணம் ஜிஎஸ்டி என்கின்றனர் லாரி உரிமையாளர்கள்.

1.50 லட்சம் லாரிகள்: தமிழகத்தில் 1.50 லட்சம் லாரிகள் உள்ளன, இவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை பழைய லாரிகள், இதனை அவ்வப்போது பழுது நீக்கித்தான் பராமரித்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் ஆட்டோமொபைல் உதிரிபாகங்களுக்கு ஜிஎஸ்டி 28 வரி விதிப்பால் உதிரிபாகங்களின் விலை முன்பை விட 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. 

உதாரணமாக லாரியின் முன்பக்க டயர் விலை ஒரு ஜோடி முன்பு ரூ.28,000 முதல் ரூ.30,000 வரை இருந்தது, தற்போது ரூ.35,000 வரை உயர்ந்துள்ளது. லாரியின் பின்புறம் பொருத்தப்படும் நைலான் பைபர் டயர் ஒரு ஜோடி ரூ.35,000 லிருந்து இருந்து ரூ.40,000 ஆகவும், பெரிய நைலான் பைபர் டயர் ரூ.38,000 இருந்து ரூ.45,000 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

தொழில் நெருக்கடி: மகாராஷ்டிர மாநிலத்துக்கு அடுத்து லாரிகள் மூலம் வர்த்தக தொடர்பு அதிகம் உள்ள மாநிலம் தமிழகம், அதிலும் குறிப்பாக நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் லாரிகளின் பயன்பாடு மிக முக்கியமானது. தொழில் நகரமான திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 10,000 லாரிகள் உள்ளன. இந்த லாரிகள் மூலம் திருப்பூரில் இருந்து பனியன்கள் சென்னை, தூத்துக்குடி, விசாகப்பட்டினம், கொச்சி உள்ளிட்ட துறைமுகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட பிறகு பெரும்பாலான சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பெருமளவில் நிறுத்திவிட்டன. இத்தொழிலை நம்பி சுமார் 50,000 சுமை தூக்கும் தொழிலாளர்கள், லாரி ஓட்டுநர்கள், பார்சல் கட்டுவோர் வருமானமின்றி தவிக்கும் நிலை உருவாகியுள்ளது. 

இதுபோல் நீலகிரி மாவட்டத்தில் இருந்து காய்கறிகள், பூக்கள், மற்றும் தேயிலைகள் ஆகியவை வெளி மாநிலங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளிக்கு லாரிகள் மூலம் கொண்டு செல்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உற்பத்தி செய்யப்படும் பனியன்கள், பெட்சீட் ராகங்கள், லுங்கி, திரைசீலைகள், ஆயத்த ஆடைகள், புடவைகள் என அனைத்தும் விற்பனை செய்யப்படும் முக்கிய இடமாக விளங்குவது ஈரோடு ஜவுளி சந்தை. காட்டன் ரகங்களுக்கு 5, ஆயத்த ஆடைகளுக்கு 12, ரேயான், பாலியஸ்டருக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜவுளி விற்பனை கடும் சரிவை சந்தித்து மிகக் குறைந்த அளவிலேயே விற்பனை நடக்கிறது என்கின்றனர் ஜவுளி வியாபாரிகள்.

புக்கிங் 75 சதவீதம் வரை பாதிப்பு: 
ஜிஎஸ்டி எண் இல்லாத சிறு தொழில் நிறுவனங்கள் லாரிகளில் சரக்கு அனுப்புவதில் சிரமம் உள்ளது. லாரி புக்கிங் அலுவலகத்திலும் புக்கிங் செய்து அனுப்ப முடியாததால் கிட்டத்தட்ட 75 சதவீதம் வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.

பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்ட இடங்களில் இருந்து கொள்முதல் பகுதிக்கும், கொள்முதல் இடத்தில் இருந்து பிற சில்லறை வியாபாரிகளுக்கும் கொண்டு செல்லும் பதிவு பெற்ற சரக்கு லாரிகளுக்கு ஜிஎஸ்டியில் 5 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பொருட்களை சரக்கு லாரி உள்ளிட்ட வாகனங்களில் கொண்டு செல்லும் போது ஜிஎஸ்டி ரசீது இல்லாமல் எடுத்து செல்ல முடியாது. இதை மீறினால் சம்பந்தப்பட்ட பொருட்களுக்குரிய ஜிஎஸ்டியுடன் கூடுதலாக 100 சதவீதம் வரை அபராதம் வசூலிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

இதனால் பெரும்பாலான லாரிகளில் சரக்குகளை ஏற்றிச் செல்வது நிறுத்தப்பட்டுள்ளது. வெளி மாநிலங்களிலும் சரக்குகள் பதிவு செய்வது தடைபட்டுள்ளது. இதனால் தொடர்ந்து சரக்கு லாரி வர்த்தகம் பாதிக்கிறது. லாரி அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் வேலை இல்லாமல் தவித்து வருகின்றனர்.

இதுகுறித்து நாமக்கல்லை சேர்ந்த லாரி புக்கிங் முகவர் கே.கிருஷ்ணன் தெரிவித்தது, ஜிஎஸ்டி குறித்து அதிகாரிகளுக்கும், வியாபாரிகளுக்கும் சரியாகப் புரியவில்லை. 5, 12, 18, 28 சதவீதம் என சுமார் 1,200 பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. பதிவு செய்த லாரி உரிமையாளர்களும் 5 சதவீதம் வரி செலுத்த வேண்டும். ஒரு லாரி வைத்திருந்தாலும் ஜிஎஸ்டி}க்குள் வரவேண்டும்.
ஜிஎஸ்டி வரியோடு கூடிய ரசீது இல்லாததால் லாரிகளில் சரக்கு ஏற்ற தயக்கமாக உள்ளது. அதிகாரிகள் ஆய்வின் போது பிடித்தால் அபராதம் செலுத்த வேண்டும். சரக்கு லாரி வர்த்தக பாதிப்பை தடுக்க, ஜிஎஸ்டி வரி நடைமுறையை அனைத்து தரப்பினருக்கும் சரியான முறையில் விளக்கி சீரமைக்க வேண்டும் என்றார்.

75 சதவீதம் வரை வர்த்தகம் பாதிப்பு: ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பின்னர் லாரி போக்குவரத்து தொழில் 75 சதவீதம் வரை குறைந்துள்ளதாக லாரி உரிமையாளர்கள் தெரிவித்தனர். 

இதுகுறித்து தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொதுச்செயலர் சி.தன்ராஜ் தெரிவித்தது:

புதிய மோட்டார் வாகன சட்ட திருத்தத்தின்படி பதிவு, காப்பீடு ஆகியவற்றுக்கான கட்டணங்கள் கடுமையாக உயர்ந்து விட்டன. ஏற்கனவே ஒரு லாரிக்கு மாதந்தோறும் வருமானவரி ரூ.7,500, டீசலுக்கான வாட் வரி 25 சதவீதம் வசூலிக்கப்படுகிறது.லாரிகளுக்கு 70 முதல் 80 சதவீதம் வரை டீசல் பிடிப்பதிலேயே செலவு ஆகிவிடுகிறது. 

இவ்வாறு இருக்க பெட்ரúôல், டீசலுக்குஜிஎஸ்டி விதிக்கவில்லை. மாறாக ஆட்டோமொபைல் உதிரி பாகங்களுக்கும், ஏற்றுமதிக்கும் அரசு வரியும், கட்டுப்பாடும் விதித்துள்ளது. ஜிஎஸ்டி அமல்படுத்திய பிறகு பல்வேறு தொழில்கள் அடியோடு முடிங்கியுள்ளது. சரக்கு உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதோடு அவற்றைக் கொண்டு செல்லும் லாரி தொழிலும் முடங்கியுள்ளன. 

தீபாவளி சமயத்தில் ஒரு மாதத்திற்கு முன்பே லோடு அனுப்ப லாரிகள் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்படும். ஆனால் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் நிகழாண்டில் வெறும் 20 சதவீத அளவுக்கு மட்டுமே லாரி போக்குவரத்து வர்த்தகம் நடக்கிறது. தமிழகத்தில் தீபாவளி சமயத்தில் ஜவுளி, பட்டாசு இரண்டும் தான் லாரி போக்குவரத்தில் பிரதானமாக இருக்கும். இந்த இரண்டு தொழிலுமே ஜிஎஸ்டியால் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளதால், லாரி போக்குவரத்து தொழிலும் முடங்கியுள்ளது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT