புதுச்சேரி: புதுவை முதலியார்பேட்டை பகுதியில் டெங்கு குறித்து ஆளுநர் கிரண்பேடி செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டு சுகாதாரமற்ற முறையில் இருந்த வீட்டு உரிமையாளருக்கு அபராதம் விதித்தார்.
புதுச்சேரியில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதுவரை 3 பேர் உயிரிழந்த நிலையில், 2 ஆயிரம் பேருக்கு மேல் டெங்குவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையே துணை நிலை ஆளுநர் கிரண்பேடி டெங்குவை கட்டுபடுத்த மக்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று சில தினங்களாகவே பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார்.
இந்நிலையில் முதலியார்பேட்டை பகுதியில் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டு மக்கள் விழிப்பேடு செயல்படுமாறு வலியுறுத்தினார். ஆய்வு மேற்கொண்ட போது பழனி என்பவர் வீட்டின் வாசலில் சுகாதார மற்ற முறையில் குப்பைகளை கொட்டி வைத்திருந்ததால் வீட்டின் உரிமையாளருக்கு ரூ.100 அபராதம் விதித்தும் குப்பைகளை அகற்றும்படி கிரண்பேடி உத்தரவிட்டார்.
வீட்டின் முன்பு குப்பைகளை தேக்கினாலோ, காலி மனைகளில் மழை நீர் தேங்கும் நிலையில் இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நகராட்சி சார்பில் ரூபாய் 100 முதல் ரூபாய் 1000 வரை அபராதம் வசூலிக்கப்படும் என ஏற்கெனவே நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.