பொது நிறுவனங்களுக்கு அபராதம் விதிப்பது பயம் ஏற்படுத்துவதற்காக அல்ல: அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
தனியார் மருத்துவமனை, பள்ளி, கல்லூரி, வணிக நிறுவனங்களுக்கு அரசு அபராதம் விதிப்பது என்பது அவர்களை பயப்படுத்துவதற்காக இல்லை காய்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காவே என்றார்
தனியார் மருத்துவமனை, பள்ளி, கல்லூரி, வணிக நிறுவனங்களுக்கு அரசு அபராதம் விதிப்பது என்பது அவர்களை பயப்படுத்துவதற்காக இல்லை காய்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காவே என்றார் தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர்.
தமிழகம் தோறும் வியாழக்கிழமையை டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு தினமாக கடைப்பிடிக்கப்படுகிறது இதன் ஒரு பகுதியாக விராலிமலை, அன்னவாசல், இலுப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு பின்னர் அரசு மருத்துவமனைகளில் காய்ச்சல் காரணமாக சிகிச்சை பெற்று வருபவர்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் வியாழக்கிழமை சந்தித்து ஆறுதல் கூறிய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
தமிழக அரசு எடுத்து வரும் டெங்கு தடுப்பு தீவிர நடவடிக்கையால் பல்வேறு மாவட்டங்களில் தீவிரம் காட்டி வந்த டெங்கு தற்போது குறைந்து வருகிறது. காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள மருத்துவமனைகளில் டெங்கு பாதிப்புகுள்ளாகி சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது வெகுவாக குறைந்துள்ளது.
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள மருத்துவபணியிடங்களுக்கு கடந்த மாதம் 1113 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஆதார முறையில் 300 லேப் டெக்னீசியன்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
கொசு உற்பத்தியை உருவாக்கும் வகையில் சுற்றுபுற தூய்மையை கடைபிடிக்காமல் இயங்கிவரும் தனியார் மருத்துவமனை, பள்ளி, கல்லூரி, வணிக நிறுவனம் மற்றும் சுற்றுப்புற தூய்மை இல்லாமல் வசிக்கும் பொதுமக்களிடம் மட்டும் தான் அபராதம் வசூலிக்கப்படுகிறது. இவ்வாறு வசூலிக்கப்படும் அபராதம் என்பது அவர்களை பயப்படுத்துவதற்காக அல்ல டெங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இதையறிந்த மற்ற சிலர் சுற்றுப்புறத்தை தூம்மையாக பராமரிப்பார்கள் என்ற நோக்கத்திற்காகவே என்றார்.