கிருஷ்ணசாமி மகளுக்கு மருத்துவ சீட்டு; பாலபாரதி சொல்வது உண்மை: நானே சாட்சியாக உள்ளேன் - ஜவாஹிருல்லா
புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மகள் போதுமான மதிப்பெண் எடுக்காத நிலையிலும், ஜெயலலிதாவின் பரிந்துரையில்தான்
சென்னை: புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி மகள் போதுமான மதிப்பெண் எடுக்காத நிலையிலும், ஜெயலலிதாவின் பரிந்துரையில்தான் மருத்துவ சீட் கிடைத்தது என கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ பால பாரதி தெரிவித்தது உண்மை.. அதற்கு நானே சாட்சி என மனித நேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஜவாஹிருல்லா தனது முகநூல் பக்க பதிவில் கூறியிருப்பதாவது:
புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் தனது மகளுக்கு தகுதிக்குரிய மதிப்பெண் எடுக்காத நிலையிலும், அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா பரிந்துரையால் மருத்துவ படிப்பிற்கான இடம் பெற்றார் என்று தோழர் பாலபாரதி அவர்கள் சொல்வது முற்றிலும் உண்மை. கிருஷ்ணசாமிக்கு அடுத்த இருக்கையில் பேரவையில் அமர்ந்திருந்த நான் பால பாரதி அவர்களின் அன்றைய சபை நிகழ்வு குறித்த பதிவிற்கு சாட்சி.
சென்ற 14-வது சட்டப்பேரவையில் முதல் வரிசையில் கிருஷ்ணசாமியும் அவரது வலதுபுறத்தில் நானும், எனக்கு அடுத்து பாமக உறுப்பினர் குரு, அடுத்து காங்கிரஸ் உறுப்பினர் கோபிநாத், அடுத்தடுத்து தோழர்கள் குணசேகரன், ஆறுமுகம் அதற்கு அடுத்து 6-வது இடத்தில் அமரும் தோழர் பாலபாரதியை பார்த்தேயில்லையாம் கிருஷ்ணசாமி.
Advertisement
Advertisement
என்னைப் போன்று விடுப்பு எடுக்காமல் பேரவைக்கு வந்து துடிப்புடன் மக்கள் பிரச்சனைகளை பேரவையில் எழுப்புபவர் தோழர் பாலபாரதி. அவரை பார்த்ததேயில்லை என்றுச் சொல்லும் கிருஷ்ணசாமி அவர்கள் தன் கண்ணாடியை காவி நிறமாக மாற்றிய பிறகு தான் மருத்தவர் ஆனதும் தன் பிள்ளைகள் மருத்துவர் ஆனதும் எப்படி என்பதும் மறந்து போகும்; என்னையும் மறந்து போகும் என்னையும் மறந்து போகும் உழைக்கும் மக்களின் தோழர் பாலபாரதியும் மறந்து போகும்; அவருக்கு அடுத்த இருக்கையில் அமர்ந்து நாள் தோறும் அவர் கிருஷ்ணசாமி வெளிநடப்புச் செய்வதற்கு வழிவிட்ட என்னையும் மறந்து போகும் என் நான் நினைக்கவில்லை.
தனது தற்போதைய எஜமானர்களின் (பாஜக-ஆர்எஸ்எஸ்) குருநாதரான ஹிட்லரின் கோயபல்ஸ் தத்துவமான - திட்டமிட்டு பொய்யை பரப்புதலை வாழ்வின் லட்சியமாக கொண்டு தனது எஜமான விசுவாசத்தை காட்டியுள்ளார் கிருஷ்ணசாமி. அந்தோ பரிதாபம் என்று ஜவாஹிருலா தெரிவித்துள்ளார்.