தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களில் சிலர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆதரிப்பார்கள் என மக்களவை துணைத் தலைவர் மு.தம்பிதுரை தெரிவித்தார்.
கிருஷ்ணகிரியில் அவர் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்தது:
தமிழகத்துக்கு 'நீட்' தேர்வு தேவையில்லாத ஒன்றாகும். மறைந்த முதல்வர் ஜெயலலிதா, 'நீட்' தேர்வுக்கு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்தார். தற்போது, தமிழக முதல்வரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார். இதற்காக, அதிமுக எம்.பி.க்கள் மக்களவையில் தொடர்ந்து குரல் எழுப்புவோம்.
அதிமுகவில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. ஆனால், பிளவுகள் இல்லை. இதில் எதிர்க்கட்சிகள் பொய் பிரசாரம் செய்து அதிமுக அரசுக்கு அவப் பெயரை உண்டாக்கி, ஆட்சியைக் கவிழ்க்கப் பார்க்கிறார்கள். கருத்து வேறுபாடுகளை தமிழக முதல்வர் பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பார். சட்டப்பேரவையில் அதிமுக-வுக்கு பெரும்பான்மை உள்ளது. தற்போது அதிமுகவில் நடப்பது உள்கட்சிப் பிரச்னை. ஜக்கையன் எம்.எல்.ஏ. போன்று தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் சிலர், தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அணிக்கு வருவார்கள் எனத் தெரிவித்தார் அவர்.