அரூர் அரசு மருத்துவமனையில் கூடுதல் பெண் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
அரூரில் மாதர் சங்கம் சார்பில் சிறப்புக் கருத்தரங்கம் வட்ட செயலர் தனலட்சுமி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அரூர் அரசு மருத்துவமனையில் நாள்தோறும் 1000-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவமனைக்கு பெண் நோயாளிகள் அதிகம் வருகை தருகின்றனர். இந்த நிலையில், இந்த மருத்துவமனையில் பெண் மருத்துவர்கள் உள்பட மருத்துவர் பணியிடங்கள் அதிக அளவில் காலியாக உள்ளது. எனவே, அரூர் அரசு மருத்துவமனையில் கூடுதலாக பெண் மருத்துவர்களை நியமிக்க வேண்டும்.
அரசு மருத்துவமனையில் புறநோயாளிகள் பயன்படுத்தும் வகையில் குடிநீர் மற்றும் கழிப்பிட வசதிகளை மேம்படுத்த வேண்டும். மருத்துவமனையில் ஸ்கேன் வசதியை ஏற்படுத்த வேண்டும், அரூர் அரசு மருத்துவமனைக்கு சொந்தமான இடத்தில் முள்புதர்கள் அடைந்து கிடப்பதை தூய்மை செய்ய வேண்டும்.
பெண்கள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை மத்திய, மாநில அரசுகள் தடுத்து நிறுத்த வேண்டும். மக்களவை மற்றும் சட்டப் பேரவைத் தொகுதிகளில் மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.