சென்னை: 18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்திருப்பது ஜனநாயகப் படுகொலை என திமுக மூத்த தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவருமான துரை முருகன் கூறியுள்ளார்.
முதல்வர் பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் கொடுத்த தினகரன் அணியைச் சேர்ந்த 18 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் தனபால் நடவடிக்கை எடுத்துள்ளார்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது குறித்து தொலைக்காட்சி ஒன்றில் கருத்துக் கூறிய துரை முருகன், அவைத் தலைவர் தனபால், நீதி தவற மாட்டார் என்றே நினைத்திருந்தேன். ஆனால் அவரே இன்று இவ்வளவுப் பெரிய படுகொலையை ஜனநாயகப் படுகொலையை செய்துள்ளார்.
அவர் மீது வைத்திருந்த நம்பிக்கை சரிந்து விட்டது. எடப்பாடி பழனிசாமி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஜனநாயகத்துக்கு புறம்பான செயலில் ஈடுபட்டுள்ளார்.
பழனிசாமியைக் காப்பாற்ற வேண்டும் என்று தான் சபாநாயகர் இந்தப் படுகொலையை செய்துள்ளார். 18 பேரை வீட்டுக்கு அனுப்பிவிட்டு நான் மெஜாரிட்டியை நிரூபிக்கிறேன் என்று சொன்னால் அது கட்சிக்கு மட்டும் அல்ல ஜனநாயகத்துக்கும் புறம்பான செயல் என்று கருத்துக் கூறியுள்ளார்.