கரூர்: வேலை வாங்கித் தருவதாக கோடிக் கணக்கில் மோசடி செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக ரூ.4 கோடி அளவுக்கு லஞ்சம் பெற்றதாக செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த புகாரை அடுத்து செந்தில் பாலாஜியை கைது செய்ய சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிரம் காட்டினர். இதற்கிடையே, முன் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் இன்று காலை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், செந்தில் பாலாஜிக்கு மிகவும் நெருக்கமான ஒப்பந்ததாரர் ஒருவரின் கரூரில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்கள், உறவினர்களின் அலுவலகங்கள் என பல இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.