திமுகவை விமர்சிக்க அரசு விழாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தவறாகப் பயன்படுத்தி வருவதாக முன்னாள் அமைச்சர் க.பொன்முடி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடத்தி, எம்.ஜி.ஆர் புகழ் பாடுவதற்குப் பதில் திமுகவை விமர்சிக்கும் மேடையாக அரசு விழாவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பயன்படுத்தி வருகிறார்.
நீட் தேர்வால் நிகழ்ந்த அரியலூர் அனிதா மரணம், கதிராமங்கலம் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது தடியடி, சேலம் மாணவி வளர்மதி குண்டர் சட்டத்தில் கைது, நெடுவாசலில் இன்றுவரை தொடரும் போராட்டம், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் இருப்பது, 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை உள்ளிட்ட பிரச்னைகளுக்கு அதிமுக ஆட்சிதான் காரணம்.
அரசு விழாவில் கருணாநிதி அரசியல் பேசியதாக முதல்வர் அபாண்டமாகப் பொய் சொல்லுகிறார். அரசு விழாக்களை மிகக் கண்ணியமாக நடத்தியவர் கருணாநிதி மட்டும்தான்.
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியின் சாதனைகளை நேருக்கு நேர் நின்று பேச வர வேண்டும். மத்தியிலும், மாநிலத்திலும் திமுக அதிகாரத்தில் இருந்தபோது நிறைவேற்றப்பட்ட சாதனைத் திட்டங்களுக்கு முன்னால், அதிமுகவின் சாதனைகள் தவிடு பொடியாகும்.
எனவே, அதிமுகவின் உள்கட்சி விவகாரத்தைப் பேசவும், திமுகவை விமர்சிக்கவும் அரசு விழா என்ற பெயரில் மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கக் கூடாது.