சென்னை: தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போது எடுக்கப்பட்ட விடியோவை வெளியிடாதது குறித்து டிடிவி தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலர் டிடிவி தினகரன், இன்று ஒன்று சொல்லி நாளை வேறு பேசினால், இளைஞர்கள் அதனை பொதுமக்களிடம் வாட்ஸ் அப் மூலம் கொண்டு சேர்த்துவிடுகிறார்கள். காட்சி ஊடகங்கள், சமூக வலைத்தளங்களால் மக்கள் தற்போது மிகுந்த விழிப்புடன் உள்ளனர். தற்போது அரசியல்வாதிகள் மீது நம்பகத்தன்மை குறைந்துவிட்டது.
ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது சசிகலாவே விடியோ எடுத்தார். ஆனால் சிகிச்சை காரணமாக எடை குறைந்து, நைட்டி உடையில் ஜெயலலிதா இருந்ததால் அதை வெளியிடவில்லை. ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையின்போது உரிய நேரத்தில் அந்த விடியோவை சமர்ப்பிப்போம்.
ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ, இன்டர்போல் என யார் வேண்டுமானாலும் விசாரிக்கட்டும். எனது கருத்து என்னவென்றால், ஜெயலலிதா மரணம் குறித்து பதவியில் உள்ள மூத்த நீதிபதிகள் கொண்டு விசாரிப்பது நல்லது என்று சொல்வேன் என்று கூறினார்.