ஏமாற்றமளிக்கிறது உச்ச நீதிமன்றத் தீர்ப்பு: மார்க்சிஸ்ட்
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏமாற்றமளிப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அக் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை: காவிரி விவகாரத்தில் மத்திய அரசு சார்பில் 'ஸ்கீம்' என்பதற்கு விளக்கம் கேட்டு தாக்கல் செய்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், காவிரி நீர் பங்கீடு தொடர்பாக ஒரு வரைவுத் திட்டத்தை மே 3-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, அடுத்தகட்ட விசாரணையை மே 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. இது மத்திய அரசின் காலம் தாழ்த்துகிற முயற்சிக்கு உதவி செய்யும் வகையிலேயே அமைந்துள்ளது.
கடந்த பிப்ரவரி 16-ஆம் தேதி உச்சநீதிமன்றம் வழங்கிய இறுதித் தீர்ப்பில், நடுவர் மன்றத்தின் அனைத்து அம்சங்களையும் ஏற்றுக்கொண்டு, அதில் குறிப்பிட்டுள்ள நதிநீர் பங்கீட்டு அளவை மட்டும் நாங்கள் மாற்றம் செய்துள்ளோம் எனக் கூறியிருந்த நீதிபதிகள், அதற்கு மாறாக இப்போது கூறுவது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.
இந்தச் சூழலில் தமிழக மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு, காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை உறுதியாகப் போராட்டத்தைத் தொடர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.