முகப்பு
தமிழ்நாடு

காவிரி நீருக்கான உரிமைப் போராட்டம் மீது பாஜக அவதூறு: ஆர்.நல்லகண்ணு கண்டனம்

தமிழகத்தில் காவிரி நீர் உரிமைக்காக அனைத்துக் கட்சிகள் நடத்தி வரும் போராட்டத்தின் மீது பாஜக அவதூறு பரப்பி வருவதற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு

Updated On : 10 ஏப்ரல், 2018 at 1:34 AM
பகிர்:

தமிழகத்தில் காவிரி நீர் உரிமைக்காக அனைத்துக் கட்சிகள் நடத்தி வரும் போராட்டத்தின் மீது பாஜக அவதூறு பரப்பி வருவதற்கு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தேனியில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: காவிரி நதி நீர்ப் பிரச்னை, தமிழகத்தில் 7 கோடி மக்களின் வாழ்க்கைப் பிரச்னை. இந்தப் போராட்டம் ஆளும் கட்சிகளான அதிமுகவுக்கோ, பாஜகவுக்கோ எதிரான போராட்டமல்ல. மக்களின் வாழ்வாதார உரிமைப் போராட்டம்.
காவிரி நதி நீர் பிரச்னையில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் வாழ்வாதாரத்துக்காக, உரிமைக்காக அனைத்துக் கட்சியினரும் ஒன்றிணைந்து போராடி வருகின்றனர். இந்தப் போராட்டம் நடக்கவில்லையென்றால், தமிழகத்தின் உரிமை முற்றிலும் பறிக்கப்பட்டு, எதிர்காலம் சூனியமாகிவிடும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. காவிரி நதி நீர் பிரச்னையை அரசியல் பிரச்னை ஆக்குகிறார்கள் என்று பாஜக அவதூறு பரப்பி வருவது கண்டிக்கத்தக்கது. 
கர்நாடகத் தேர்தலுக்காக தாமதம்: தமிழகத்தில் 12 மாவட்டங்களின் பாசனத்துக்கும், 9 மாவட்டங்களின் குடிநீருக்கும் அத்தியாவசியமாக உள்ள காவிரி நதி நீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படாமல் இருந்து வந்தது. தற்போது கிடைத்துள்ள தீர்ப்பும் அமல்படுத்தப்படாமல் உள்ளது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பை, 7 கோடி மக்களின் வாழ்வாதாரத்துக்கான தீர்வை கர்நாடகத் தேர்தலை மையப்படுத்தி அமல்படுத்தாமல் மத்திய அரசு தாமதப்படுத்தி வருகிறது.
எனவே, தமிழகத்துக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கும் போராட்டமும், தொடர் போராட்டங்களும் நடைபெறும். மக்கள் ஆதரவுடன் இந்தப் போராட்டம் வெற்றி பெறும்.
தேனி மாவட்டத்தின் இயற்கை வளத்தை பாதிக்கும் நியூட்ரினோ ஆய்வுத் திட்டத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தை அணுகி தடையை நீக்கி, நியூட்ரினோ ஆய்வுக்கு அனுமதி பெற்றுள்ளது. இதை எதிர்த்து, மதிமுக பொதுச் செயலர் வைகோ நடைப்பயண பிரசாரம் மேற்கொண்டுள்ளார். 
தமிழக இயற்கை வளத்தை பாதிக்கும் திட்டங்கள் திணிக்கப்பட்டு வருகின்றன. இயற்கை சீற்றத்தின் பாதிப்புகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படுவதில்லை. இந்தப் பிரச்னைகளில் அனைவரும் ஒன்றுபட்டு போராட வேண்டும் என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.