கேரளத்திலும் ஆட்சி இழக்கிறதா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்?
கேரளத்தில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான கூட்டணி ஆட்சியை இழப்பதாக கருத்துக் கணிப்பில் தகவல்...
கேரளத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிலான கூட்டணி 2 ஆம் இடத்துக்குத் தள்ளப்படும் என கருத்துக் கணிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளத்தில், 140 தொகுதிகளுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக கடந்த ஏப். 9 ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி இடையே மும்முனைப் போட்டி நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, வாக்கு எண்ணிக்கை வரும் மே 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. மேலும், கேரளத்தின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளின் முடிவுகள் புதன்கிழமை (ஏப். 29) மாலை வெளியாகியுள்ளது.
Advertisement
இதில், கடந்த 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இம்முறை 2 ஆம் இடத்துக்குத் தள்ளப்படும் எனக் கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சி தலைமையிலான கூட்டணி சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு கேரளத்தில் ஆட்சி அமைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
நாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆதிக்கம் செலுத்தி வந்த திரிபுரா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களைத் தொடர்ந்து கேரளத்திலும் அக்கட்சி தோல்வியடைந்து எதிர்க்கட்சியாக உருவாகக் கூடும் என கருத்துக் கணிப்புகள் கூறுவது குறிப்பிடத்தக்கது.