நிலுவை வழக்குகளுக்குத் தீர்வு: சமரச மையத்துக்கு தலைமை நீதிபதி பாராட்டு
நீண்ட நாள்களாக நிலுவையில் இருந்த பல்வேறு வழக்குகளுக்கு சமரச மையம் மூலம் தீர்வு காணப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்தார்.
நீண்ட நாள்களாக நிலுவையில் இருந்த பல்வேறு வழக்குகளுக்கு சமரச மையம் மூலம் தீர்வு காணப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்தார்.
தமிழ்நாடு சமரச மையத்தின் 14 -ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, சமரச மையம் குறித்த விழிப்புணர்வு முகாமும், சமரச நாள் நிகழ்ச்சியும் உயர் நீதிமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி விழிப்புணர்வு முகாமைத் தொடங்கி வைத்து, சமரச மையம் குறித்த பெயர்ப் பலகையை வெளியிட்டுப் பேசியதாவது:
சென்னை உயர் நீதிமன்றத்தில்தான் நாட்டிலேயே முதன்முறையாக மாநில சமரச இசைவு மையம் கடந்த 2005 -ஆம் ஆண்டு ஏப்ரல் 9 -ஆம் தேதி தொடங்கப்பட்டது. நீண்ட நாள்களாக நிலுவையில் இருந்த வழக்குகளுக்கு சமரச மையம் மூலம் அதிக எண்ணிக்கையில் தீர்வு காணப்பட்டிருப்பது பாராட்டுக்குரியது.
161 வழக்குரைஞர்களுக்குப் பயிற்சி: நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையைக் குறைப்பதே இந்த சமரச மையத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த மையம் குறித்து 161 வழக்குரைஞர்களுக்கும், 974 பயிற்றுநர்களுக்கும், 300 க்கும் மேற்பட்ட கீழமை நீதிமன்ற நீதிபதிகளுக்கும் பயிறசி அளிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் இம்மையம் செயல்பட்டு வருகிறது என்றார் அவர். பின்னர், சென்னை உயர் நீதிமன்றத்தில் சமரச மையத்தை தொடங்கிய மூத்த வழக்குரைஞர் ஸ்ரீராம் பஞ்சுவுக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி வாழ்த்துத் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து பேசிய தமிழ்நாடு சமரச மையத்தின் தலைவரும், நீதிபதியுமான ஹூலுவாடி ஜி.ரமேஷ், 'தமிழகம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் சட்டரீதியாக அனுபவம் பெற்ற அலுவலர்களை உள்ளடக்கிய சமரச மையங்களை உருவாக்க வேண்டும்' என கோரிக்கை விடுத்தார்.
இந்த நிகழ்ச்சியில் உயர் நீதிமன்ற நீதிபதிகள், எஸ்.மணிக்குமார், பி.கலையரசன், அரசு தலைமை வழக்குரைஞர் விஜய் நாராயண், சென்னை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன், மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன், சமரச மைய இயக்குநர் பி.முருகன், துணைப்பதிவாளர் சுமதி, உதவிப் பதிவாளர் ரமா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.