முகப்பு
தமிழ்நாடு

மனநல பாதிப்பு இல்லவாசிகளுக்கான உணவுத் தொகை உயர்வு: அரசு உத்தரவு

மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்களில் உள்ள பயனாளிகளுக்கான மாதாந்திர உணவுத் தொகையை ரூ.650 -ஆக

Updated On : 10 ஏப்ரல், 2018 at 2:13 AM
பகிர்:

மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான இல்லங்களில் உள்ள பயனாளிகளுக்கான மாதாந்திர உணவுத் தொகையை ரூ.650 -ஆக உயர்த்தி முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நலத் துறை திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான இல்லங்கள் தமிழகத்தில் 31 மாவட்டங்களில், அரசு நிதியுதவியுடன் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மூலம் செயல்பட்டு வருகின்றன. குடும்பத்தினரால் கைவிடப்பட்டு சாலைகள் மற்றும் பொது இடங்களில் சுற்றித் திரியும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு, இந்த இல்லங்களில் சேர்க்கப்படுகின்றனர்.
இவற்றில் உறைவிடம், உணவு, மருத்துவம், மறுவாழ்வுப் பணிகள் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. இதில் ஒவ்வொரு இல்லத்திலும் 50 மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு தமிழகம் முழுவதும் 1,550 பேர் பயனடைந்து வருகின்றனர்.
இந்த இல்லங்களில் உள்ள பயனாளிகளுக்கு உணவுச் செலவாக மாதத்துக்கு தலா ரூ.400 வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு ரூ.74.40 லட்சம் தமிழக அரசால் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பயனாளிகளின் நலத்தைக் கருத்தில் கொண்டு, இப்போது வழங்கப்பட்டு வரும் உணவு செலவுத் தொகையை ரூ.400-லிருந்து ரூ.650-ஆக உயர்த்தி வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதனால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.46.50 லட்சம் கூடுதலாக செலவு ஏற்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.