வத்தலகுண்டு அருகே பேருந்து - கார் மோதல்: சென்னையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் சாவு
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே திங்கள்கிழமை அரசுப் பேருந்தும், காரும் மோதிக் கொண்ட விபத்தில், சென்னையைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே திங்கள்கிழமை அரசுப் பேருந்தும், காரும் மோதிக் கொண்ட விபத்தில், சென்னையைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
சென்னை, அம்பத்தூரை அடுத்துள்ள அத்திப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் ரஷீத் (44). இவர், கொளத்தூர் பகுதியில் உள்ள தனியார் போக்குவரத்து நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் தனது நண்பர்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து, 3 கார்களில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை கொடைக்கானலில் தங்கியவர்கள், மீண்டும் சென்னை செல்வதற்காக திங்கள்கிழமை காலை புறப்பட்டனர்.
நண்பர்கள் வந்த 2 கார்கள் முன்னால் செல்ல, அதைத்தொடர்ந்து அப்துல் ரஷீத் காரை ஓட்டி வந்துள்ளார். இந்த காரில், ரஷீத்தின் நண்பர் முகமதுவின் மகன் அதில் (6) என்ற சிறுவனும் பயணித்துள்ளார். திண்டுக்கல் - தேனி சாலையில் வத்தலகுண்டு அடுத்துள்ள கட்டகாமன்பட்டி இடைமலையான் கோயில் கரடு பகுதியில் கார் வந்தபோது, கோவையிலிருந்து தேனி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து கார் மீது மோதியுள்ளது.
இதில், பலத்த காயமடைந்த அப்துல் ரஷீத், அவரது மனைவி ரசீனா பேகம் (35), அவர்களது மகன் பாசில் (12) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த அவர்களது மகள் லம்யா (14), வாசில் (12), அதில் ஆகியோர் வத்தலகுண்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு லம்யா உயிரிழந்தார். அதில் மற்றும் வாசில் இருவரும், தீவிர கிசிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பாசில் மற்றும் வாசில் ஆகியோர் இரட்டைக் குழந்தைகள் எனத் தெரிய வந்துள்ளது.
சென்னையில் வசித்து வந்தாலும், அப்துல் ரஷீத்தின் சொந்த ஊர், கேரள மாநிலம் கோழிக்கோடு அடுத்துள்ள அல்லிக்கோடு எனக் கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து வத்தலகுண்டு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.