கொடைக்கானலிலிருந்து திரும்பும் வழியில் பாறை மீது கார் மோதியதில் செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த 10 பேர் திங்கள்கிழமை காயமடைந்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் முத்துராஜ் (60). இவர், தனது குடும்பத்தினருடன் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்குவேனில் சுற்றுலா வந்துள்ளார். பின்னர், கொடைக்கானலிலிருந்து செங்கல்பட்டு செல்வதற்காக திங்கள்கிழமை பிற்பகல் அவர்கள் புறப்பட்டனர்.
அந்த வேன், வத்தலகுண்டு நோக்கி மலைச் சாலையில் வந்து கொண்டிருந்தபோது, டம் டம் பாறையை அடுத்துள்ள நண்டாங்கரை பகுதியில் பாறை மீது மோதியது. இதில், வேனில் பயணம் செய்த முத்துராஜ், அபுபக்கர் (29), திவ்யா (27), வினோதா (55), திலகவதி (60), நந்தினி (20), சந்துரு (35), நந்தன் (27), கீர்த்தனா(29), மனோ பிரபு (38) ஆகியோர் காயமடைந்தனர். வத்தலகுண்டு தனியார் மருத்துவமனையில் காயமடைந்த அனைவரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.