மழைக்கால நிவாரணம் வழங்க வலியுறுத்தி, தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் உப்பளத் தொழிலாளர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உப்பளத் தொழிலாளர்களுக்கு கேரள மாநிலத்தைப் போல நாளொன்றுக்கு ரூ. 600 ஊதியம் வழங்க வேண்டும். மழைக் காலங்களில் வேலையில்லாத நாள்களுக்கு தேர்தல் கால வாக்குறுதிப்படி நிவாரணத் தொகை வழங்க வேண்டும்.
தொழிலாளர் நல, தொழிற்சாலை சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உப்பளத் தொழிலாளர்கள் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு, உப்புத் தொழிலாளர்கள் சங்கம் (சிஐடியூ) தலைவர் கே. பொன்ராஜ் தலைமை வகித்தார்.
செயலர் ஞானதுரை, பொருளாளர் மணவாளன், துணைத் தலைவர் சங்கரன் உள்ளிட்டோர் போராட்டத்தில் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற நூற்றுக்கும் மேற்பட்ட உப்பளத் தொழிலாளர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளிக்க செல்ல முயன்றனர்.
பாதுகாப்பு நலன் கருதி சிலரை மட்டும் அனுமதிப்பதாக போலீஸார் தெரிவித்ததால் அவர்கள் அனைவரும் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, உப்பளத் தொழிலாளர் சங்க நிர்வாகிகள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துவிட்டு சென்றனர்.