முகப்பு
தமிழ்நாடு

ஏடிஎம் சேவைக்கு கட்டணம் வசூலிப்பதை கைவிட வேண்டும்: பொதுத் துறை வங்கிகள் ஊழியர்கள் சம்மேளனம்

ஏடிஎம்களில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்குப் பிறகு பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டதால்தான் தற்போது மக்கள் அனைவரும்

Updated On : 19 ஏப்ரல் 2018, 2:35 am IST
பகிர்:

ஏடிஎம்களில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்குப் பிறகு பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டதால்தான் தற்போது மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் பணத்தை அதிக அளவு எடுப்பதாக இந்திய பொதுத் துறை வங்கி ஊழியர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சம்மேளன பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன் புதன்கிழமை வெளியிட்ட செய்தி:
நாட்டில் கடந்த சில தினங்களாக பணத்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வட இந்தியாவில் ஏடிஎம்களில் பணம் இல்லாமல் மக்கள் கடும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். பொதுத்துறை வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் பொதுமக்கள் அவ்வபோது வங்கிக்குச் சென்று பணம் எடுக்க சிரமப்படுவதாலும் இத்தகைய சேவையை வழங்க அதிக மனித சேவை தேவைப்படுவதால் நாட்டில் ஏடிஎம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதில் தங்கள் தேவைக்கேற்ப எப்போது வேண்டுமானாலும் மக்கள் எடுக்க வகை செய்யப்பட்டது.
ஆனால் பாஜக தலைமையிலான மத்திய அரசு திடீரென பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்ட அதே வேளையில் ஒரு குறிப்பிட்ட முறைக்கு மேல் (சில வங்கிகளின் ஏடிஎம்களில் 3 முறைக்கு மேல்) பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கிறது. இதன் காரணமாக மக்கள் தங்கள் பணத்தை ஒரே நேரத்தில் எடுத் து வீட்டில் வைத்துக் கொள்கின்றனர். எனவே இதை பழைய முறைக்குக் கொண்டு வர வேண்டும். புதிதாக வெளியிடப்பட்ட ரூ.2,000 நோட்டுகளுக்குப் பதிலாக ரூ.1,000 நோட்டுகளையும், ரூ.500 நோட்டுகளை அதிக அளவிலும் வெளியிட வேண்டும். அதோடு மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள நிதித்தீர்வு மற்றும் வைப்பு காப்பீடு மசோதா நிறைவேற்றப்பட்டால் வங்கி திவாலானால் கணக்கு வைத்திருப்பவரின் பணத்துக்கு எத்தகைய உத்தரவாதமும் இல்லை என்பதால் மக்கள் வங்கிகளில் பணத்தை மொத்தமாக வைத்திருக்க அச்சப்படுகின்றனர்.
எனவே இதையெல்லாம் மத்திய அரசு, ரிசர்வ் வங்கி, பொதுத்துறை வங்கிகள் கவனத்தில் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.