மருத்துவ மேற்படிப்பு: ஊக்க மதிப்பெண்கள் தொடர்பான அரசின் ஆணையை ரத்து செய்த உயர் நீதிமன்றம்
மருத்துவ மேற்படிப்பில் மாணவர்களை சேர்க்கும் போது ஊக்க மதிப்பெண்கள் வழங்குவதற்கான பகுதிகளை வகைப்படுத்தி தமிழக அரசு பிறப்பித்த ஆணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
சென்னை: மருத்துவ மேற்படிப்பில் மாணவர்களை சேர்க்கும் போது ஊக்க மதிப்பெண்கள் வழங்குவதற்கான பகுதிகளை வகைப்படுத்தி தமிழக அரசு பிறப்பித்த ஆணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
தொலைதூரம், எளிதில் அணுக முடியாத மற்றும் மலைப் பகுதிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்கள், மருத்துவ மேற்படிப்பில் சேரும் போது 10 முதல் 30 சதவீதம் வரை ஊக்க மதிப்பெண்கள் பெறுகிறார்கள்.
நடப்பு கல்வியாண்டில் மருத்துவ மேற்படிப்பில் மாணவர் சேர்க்கைக்காக அரசு மருத்துவர்களுக்கு வழங்கப்படும் ஊக்க மதிப்பெண்களுக்கான பகுதிகளை வகைப்படுத்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருந்தது.
Advertisement
Advertisement
இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சில மருத்துவர்கள் வழக்குத் தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிபதி எஸ். வைத்தியநாதன், தொலைதூரப் பகுதி மற்றும் எளிதில் அணுக முடியாத பகுதி என வகைப்படுத்தி தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டார்.
முன்னதாக இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கில் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை மருத்துவ மேற்படிப்பிற்கான மாணவர் சேர்க்கையை நடத்தக் கூடாது என மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.