ஸ்ரீவிலி. அருகே அரசு பேருந்து மீது வேன் மோதிய விபத்தில் 3 பேர் சாவு
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே புதன்கிழமை அரசுப் பேருந்து மீது வேன் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே புதன்கிழமை அரசுப் பேருந்து மீது வேன் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
புதுக்கோட்டையிலிருந்து மாடுகளை ஏற்றிக்கொண்டு ராஜபாளையத்திற்கு வேன் ஒன்று புதன்கிழமை புறப்பட்டது. மாடுகளை இறக்கிவிட்ட பின்னர் வேன், கொல்லம் -திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. நத்தம்பட்டிக்கும், கிருஷ்ணன்கோவிலுக்கும் இடையே சென்றபோது, எதிரே சென்னையிலிருந்து செங்கோட்டை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு விரைவு பேருந்து மீது வேன் மோதியது.
இந்த விபத்தில் அறந்தாங்கி கோட்டையைச் சேர்ந்த வேன் ஓட்டுநர் விக்னேஷ் (25) மற்றும் வேனில் பயணித்த புதுக்கோட்டையைச் சேர்ந்த பாலாஜி (21), அறந்தாங்கியைச் சேர்ந்த மகேந்திரன் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புப் படை வீரர்கள் இடிபாடுகளில் சிக்கியிருந்த மூவரின் சடலங்களையும் மீட்டனர். இதனால் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து அரசு போக்குவரத்துக் கழக பேருந்து ஓட்டுநர் வீரகுமார் கொடுத்த புகாரின் பேரில் நத்தம்பட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
வேன் ஓட்டுநர் விக்னேஷ் தூக்க கலக்கத்தில் வாகனத்தை இயக்கியதே விபத்துக்கு காரணம் என போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.