உயர் நீதிமன்றம் உத்தரவு: 1,000 டாஸ்மாக் கடைகள் மூடல்
மறுவரையறை செய்யப்பட்டு அறிவிக்கை வெளியிடப்படாத சாலைகளில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மறுவரையறை செய்யப்பட்டு அறிவிக்கை வெளியிடப்படாத சாலைகளில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான அறிவுறுத்தல்களை டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் ஆர்.கிர்லோஷ்குமார் அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் வழங்கியுள்ளார்.
தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகள் ஊராட்சி சாலைகளை மறுவரையறை செய்து அறிவிக்கை வெளியிடப்படாமல் இருந்தால், அந்தச் சாலைகளில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவினைத் தொடர்ந்து, தமிழகத்தில் அதுபோன்று மறுவரையறை செய்து அறிவிக்கை வெளியிடப்படாத சாலைகளில் இயங்கி வரும் டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட நிர்வாகங்களுக்கு, டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, சுமார் 1,000 கடைகள் மூடப்பட்டிருப்பதாகவும் அதனால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ.5 ஆயிரம் கோடி அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் எனவும் டாஸ்மாக் நிர்வாக வட்டாரங்கள் தெரிவித்தன.
தமிழகத்தில் சுமார் 4,600-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்தன. இவற்றின் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.25,000 கோடி அளவுக்கு வருவாய் கிடைத்து வந்தது. ஆனால், கடந்த சில நிதியாண்டுகளில் இந்த வருவாய் குறைந்து வருவது குறிப்பிடத்தக்கது.