சொந்த நலனுக்காக விவசாயத்தைத் தியாகம் செய்யும் பாஜக அரசு: ராகுல் காந்தி
பாஜக அரசு விவசாயிகளுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாதது பற்றி ராகுல் காந்தி தெரிவித்தவை...
பாஜக அரசு விவசாயிகளுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தங்களின் சொந்த நலனுக்காக விவசாயத்தைத் தியாகம் செய்யத் தயாராகி விட்டதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
காங்கிரஸ் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இன்று வெளியிட்ட பதிவில், “மக்களவையில் இந்த அரசிடம் நான் நேரடியாக ஒரு கேள்வியை வைத்தேன். விவசாயிகளுக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட வாக்குறுதியான குறைந்தபட்ச விலை நிர்ணயக் கொள்கையின்படி சி2+50 என்ற சதவீதத்தில் கணக்கிடப்பட்ட வாக்குறுதி ஏன் இன்றும் நிறைவேற்றப்படாமல் உள்ளது?
இதற்கு நேரடி பதிலைத் தராமல், அரசு தற்போதுள்ள குறைந்தபட்ச விலை நிர்ணயக் கொள்கை கணக்கையே மீண்டும் தெரிவித்தது. எந்தவொரு தர்க்கப்பூர்வமான விளக்கமுமின்றி ’தேச முன்னுரிமைகள்’ எனக் கூறி குறைந்தபட்ச விலை நிர்ணயக் கொள்கையை நிறுத்துமாறு மாநிலங்களுக்கு அழுத்தம் கொடுத்ததை அரசு ஒப்புக் கொண்டது” என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும், அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம் ’வர்த்தகம் அற்ற தடைகளைக்’ குறைப்பது பற்றிப் பேசுகிறதா என்று கேட்ட அவர், “இது குறைந்தபட்ச விலை நிர்ணயக் கொள்கை முறையையும் அரசாங்க கொள்முதல் முறையையும் பாதிக்க முயற்சிக்கிறதா?” என்றும் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
பாஜக அரசு விவசாயிகளுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தங்களின் சொந்த நலனுக்காக விவசாயத்தைத் தியாகம் செய்யத் தயாராகி விட்டது என்றும் அவர் தெரிவித்தார்.