சென்னை பெருநகர எல்லை விரிவாக்கம்: ராமதாஸ் கண்டனம்
சென்னை பெருநகர எல்லையை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்
சென்னை பெருநகர எல்லையை விரிவாக்கம் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை பெருநகர எல்லையை காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் பெரும்பான்மைப் பகுதிக்கு நீட்டித்து, 8 மடங்காக விரிவுபடுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின்படி இரு மாவட்டங்களில் 1,709 கிராமங்கள் சென்னை பெருநகர எல்லைக்குள் கொண்டு வரப்படும். இதனால் தில்லிக்கு அடுத்தபடியாக சென்னை இந்தியாவின் இரண்டாவது பெருநகரமாக உருவெடுக்கும். சென்னை விரிவுபடுத்தப்பட்டால், புதிதாகச் சேர்க்கப்படும் பகுதிகளில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும் என்ற எண்ணம் எழலாம்.
ஆனால், நடைமுறையில் நகரமயமாக்கலின் எந்த நன்மையும், புதிதாகச் சேர்க்கப்படும் பகுதிகளுக்குக் கிடைக்காது.
விரிவுபடுத்தப்படவுள்ள பகுதிகளில் பசுமையான வயல்வெளிகள் உள்ளன. அவற்றைப் பாதுகாக்கவும், 4,200 நீர்நிலைகளைப் பராமரிக்கவும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் ஆக்கப்பூர்வமான திட்டங்கள் எதுவும் இல்லை. இத்தகைய சூழலில் சென்னை விரிவாக்கப்பட்டால் வயல் வெளிகளும், நீர் நிலைகளும் வீட்டுமனைகளாக்கப்படலாம். அதனால் உற்பத்தி குறைந்து உணவுப் பஞ்சம் ஏற்படக்கூடும்.
தமிழக ஆட்சியாளர்கள் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பல்லாயிரம் ஏக்கர் நிலங்களை ஒட்டு மொத்தமாக வாங்கிக் குவித்துள்ளனர். சென்னை விரிவுபடுத்தப்பட்டால் அவர்கள் வாங்கிக் குவித்துள்ள நிலங்களின் மதிப்பு உயரும்.
ஆட்சியாளர்களின் சுயநலனுக்காகவும், சுயலாபத்துக்காகவும் எல்லைகள் மாற்றி சீரழிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. சென்னை பெருநகர எல்லைகளை விரிவுபடுத்தும் திட்டத்தை தமிழக ஆட்சியாளர்கள் கைவிட வேண்டும்.