வழக்குரைஞர்கள் கூட்டுறவுச் சங்க தேர்தல் ரத்து
உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சென்னை வழக்குரைஞர்கள் கூட்டுறவுச் சங்கத்தின் தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையர் உத்தரவிட்டார்.
உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சென்னை வழக்குரைஞர்கள் கூட்டுறவுச் சங்கத்தின் தேர்தலை ரத்து செய்து தேர்தல் ஆணையர் உத்தரவிட்டார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் வி.ஆனந்த் தாக்கல் செய்த மனுவில், 'உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சென்னை வழக்குரைஞர்கள் கூட்டுறவுச் சங்கத்துக்கு வரும் மே 7 -ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சங்கத்தில் 4,392 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மே 1 -ஆம் தேதி முதல் ஜூன் 3 -ஆம் தேதி வரை கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான வழக்குரைஞர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்றுவிட்டனர். இந்த நிலையில் தேர்தல் நடந்தால் உறுப்பினர்களாக உள்ள வழக்குரைஞர்கள் பலர் வாக்களிக்க முடியாது. எனவே, இந்தத் தேர்தலை ஜூன் 4 -ஆம் தேதிக்குப் பிறகு நடத்த வேண்டும். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்தேன். ஆனால் இந்த மனுவை இதுநாள் வரை பரிசீலிக்கவில்லை' என கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வழக்குரைஞர் ஜி.மோகனகிருஷ்ணன் ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, கூட்டுறவுச் சங்கங்களின் தேர்தல் ஆணையர் மனுதாரரின் கோரிக்கையை பரிசீலிக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்து கோரிக்கையை பரிசீலித்த ஆணையர், சென்னை வழக்குரைஞர்கள் கூட்டுறவுச் சங்கத்துக்கு வரும் 7 -ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார்.