திமுகவை உடைக்க யாருக்கும் வலிமை கிடையாது திமுகவின் செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள அரங்கில் திமுக-வின் அவசர செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது.
க.அன்பழகன், துரைமுருகன், கனிமொழி, பொன்முடி, டி.ஆர்.பாலு, ஆ.ராசா, தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர். மேலும் திமுக எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள், முன்னாள் எம்.எல்.ஏக்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துகொண்டனர். செயற்குழு கூட்டத்தில் திமுக தலைவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வண்ணம் அவருடைய சாதனைகளை பட்டியலிட்டு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திமுக செய்தித் தொடர்பாளர் டிகேஎஸ் இளங்கோவன்,
திமுக தலைவர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கவே செயற்குழு கூட்டம் நடைபெற்றது. காலம் வரும்போது பொதுக்குழு கூடி தலைவரை தேர்வு செய்யும். திமுகவை உடைக்க யாருக்கும் வலிமை கிடையாது. அடுத்தவர்களின் சதிக்கும் உடன்படமாட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.