நெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பெருக்கால் குறுக்குத்துறை சுப்பிரமணிய சாமி கோவில் நீரில் மூழ்கியது. தென்காசி பகுதியில் பெய்துவரும் தொடா் மழையின் காரணமாக தென்காசி-குற்றாலம் பிரதான சாலையில் அமைந்துள்ள யானைப்பாலம் சிற்றாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றுப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக கொல்லம்- செங்கோட்டை இடையிலான அனைத்து ரயில்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. செங்கோட்டை அருகே வெள்ளம் காரணமாக பண்பொழி-வடகரை சாலையில் போக்குவரத்து துண்டிப்பு.
ஈரோடு மாவட்டத்தின் பவானிசாகர் அணையின் மொத்த கொள்ளளவான 120 அடியில் 117 அடி புதன்கிழமை நிரம்பியது. அணைக்கு நீர்வரத்து 43,300 கன அடியாக உள்ளது, அணையில் இருந்து 43,500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதனால் பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கோபிசெட்டிபாளையம் அருகே அரசூர், கணேசபுரம் பகுதிகளில் வீடுகளுக்குள் நீர் புகுந்தது. எனவே அப்பகுதியினர் பத்திரமாக மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பவானி ஆற்றின் கரையோரப் பகுதிகளான அண்ணாநகா், கொடிவேரி, புஞ்சைபுளியம்பட்டி, கள்ளிப்பட்டி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான விவசாய நிலங்களில் வெள்ள நீா் புகுந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.